உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்...


 அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (டிச.30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர், அங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது.


இதற்கு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர்கள் அரசுக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்தனர். பல ஆண்டுகளாகக் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகளுடன் காத்திருந்தவர்களின் பணி வாய்ப்பும் கேள்விக்குறியானது.


இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறையில் பணியாற்றி வரும் உபரி ஆசிரியர்களுக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்பவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

“அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறையில் பணியாற்றும், 59 உபரி ஆசிரியர்களை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி அளிப்பதற்கு உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அறிகிறோம்.


இதற்காக வேளாண்மைப் பல்கலைக்கழகத் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை, உயர் கல்வித்துறை கோரியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்புக்காக சுமார் 2,500 பேர் காத்திருக்கிறோம். குறைந்த ஊதியத்தில் தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறோம்.


அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு அளிக்க உள்ள வாய்ப்பு எங்களுக்கானது. உயர் கல்வித்துறையின் இந்த முடிவால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரிப் பேராசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும் முடிவைக் கைவிட்டு, அப்பணியிடங்களுக்குத் தகுதியுள்ள எங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தப்பட வேண்டும்’’.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தரப்பில், “அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு, இப்பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்குவது குறித்து அரசிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. உங்கள் பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்று விளக்கம் அளிக்கப்பட்டவுடன், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...