பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும் - தமிழக அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் வேண்டுகோள்...



பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும் - தமிழக அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள்  வேண்டுகோள்...

------------------------------------------------

கடந்த 200 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறையில் இருந்த இயக்குநர் பதவியை ஒழித்துவிட்டு அதற்குப்பதிலாக ஆணையராக  ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்திருக்கிறது.  பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் இயக்குநர் பதவி பல விதங்களில் தமிழகக் கல்விச் சூழலுக்கு அவசியமானதாகும். எனவே அதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.


பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பொறுப்புக்கு ஆசிரியர்கள் பதவி உயர்வின் மூலம் வந்துகொண்டிருந்தனர். மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், அதன் பின்னர் கல்வித்துறை இணை இயக்குநராகவும் பின்னர் இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்று அத்துறையை நிர்வகித்து வந்தனர். இப்போது அந்தப் பதவி  ஒழிக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப் படுவதால் இதுவரை பள்ளிக்கல்வியை நன்கு அறிந்த ஒருவர் இயக்குநராக வருவதற்கு இருந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர் பணிகளுக்கான தேர்வில் இட ஒதுக்கீடு இருக்கிற காரணத்தினால் இயக்குநர் பொறுப்புக்கு பதவி உயர்வின்மூலம்  எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வர வாய்ப்பு இருந்தது. அது சமூகநீதிக்கு உகந்ததாகவும் இருந்தது.


கடந்த அதிமுக ஆட்சியின்போதுதான் ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். பாஜக அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்தே அதிமுக அரசு அவ்வாறு செய்தது எனப் பலரும் அப்போது குற்றம் சாட்டினார்கள். ஆணையர் பதவி தேவையற்றது என்றும் கூறினார்கள். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஆணையர் பதவியை நீக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் இயக்குநர் பதவி ஒழிக்கப்பட்டிருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. 


மத்திய அரசு இப்போது தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சனாதனக் கொள்கையைத் திணிக்க முற்படும் நேரத்தில் ஆசிரியர்களின் மத்தியிலிருந்து ஒருவர் இயக்குநராக வருவது தமிழக அரசுக்கு உதவியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக ஏற்கனவே ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கும்போது மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அவருக்கு கீழே நியமிப்பது தேவையா? என்பதையும் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.


ஆசிரியர்களின் குரலுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் திமுக அரசு, இப்போதும் அந்த மரபைப் பின்பற்றி மீண்டும் இயக்குநர் பதவியை முன்பு இருந்தது போலவே உருவாக்கிடவேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறோம். 


இவண்:

தொல். திருமாவளவன்,

நாடாளுமன்ற உறுப்பினர்,

நிறுவனர்- தலைவர், விசிக.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...