விகடன் இணையதளம் மத்திய அரசின் சட்ட அமலாக்கத்துறையால் முடக்கமா ? - காரணம் என்ன ?
Is Vikatan website blocked by central government - what is the reason?
பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட காரணத்தால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
தமிழின் பிரபலமான ஊடகமாக திகழ்வது விகடன். பிரபல தனியார் ஊடக நிறுவனமான விகடன் நூற்றாண்டுகளாக இயங்கி வரும் நிலையில், அவர்களது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக சித்திரம் வரையப்பட்டிருந்தது.
மோடிக்கு எதிரான சித்திரம்:
அந்த சித்திரத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதாக கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக-வினர், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார்.
விகடன் இணையதளம் முடக்கமா?
இந்த சூழலில், அண்ணாமலை புகாரின் அடிப்படையில் விகடன் செய்தி நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ABP பத்திரிகையாளர்கள் தரப்பின் சார்பில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகனை தொடர்பு கொண்டபோது அவரது உதவியாளர் பதில் அளித்தார்.
அவர் அளித்த பதிலில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது உண்மை என்று கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை சித்தரித்து வரையப்பட்ட கார்ட்டூனுக்கு எதிராக விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க. வரவேற்பு
இதற்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன் பாரத பிரதமர் உலகத் தலைவர் நரேந்திர மோடி அவர்களை அவதூறாக சித்தரித்த விகடன் டிஜிட்டல் சைட் முடக்கப்பட்டது. நீதி வெல்ல வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பல பாஜக-வினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை போன்று எதுவும் மத்திய அரசு சார்பிலோ அல்லது அமைச்சர் எல்.முருகன் தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.
விகடன் குழுமம் பரபரப்பு அறிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக விகடன் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.
முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.