கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு - ஆதரவா? அதிருப்தியா?

  



முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஆதரவினை கொண்டு வந்து சேர்த்ததா? அதிருப்தியினை கொண்டு வந்து சேர்த்ததா?


 *மாநாட்டினை நடத்திய ஒருங்கிணைப்பாளர்கள் சுய பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்!. போர்க்குண இயக்க உறுப்பினர்களின் உரிமை குரல்!.. ஆதார் அட்டையினைப் போல அவரவர் சங்கங்கள் தான் அடையாள முகவரி என்பதை ஏன் மறந்து போனார்களோ தெரியவில்லை?..*



*AIFETO... 10.02.2026.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண்:- 36/ 2001.*


 *பிப்ரவரி 8-ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு அரசுத் திட்டங்களினால்  மக்களிடம் பாராட்டு பெறுவதற்கான காரணமே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான்!.. நீங்கள் எங்களுக்கு!.. நாங்கள் உங்களுக்கு!... எப்போதும் பக்கபலமாக இருப்போம். 2.0 ஆட்சியிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறிடும்!.. என்று ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதலமைச்சர். உறுதியளித்துள்ளார்.*



 *புதிதாக எந்த அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிடவில்லை. பெட்டி இருக்கிறது!.. பூட்டு இருக்கிறது!.. சாவியும் இருக்கிறது!.. திறந்து பார்த்தால் நிதி இல்லை!..*


 *முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் என் பெயருக்கு முன்னால் கருணை இருக்கிறது... ஆனால் உங்களுக்கு கொடுப்பதற்கு என் பெயருக்கு பின்னால் இருக்கிற நிதி இல்லையே!.. என்பார்.*


 *ஆனால் அவர்கள் காலத்தில் தான் இந்தியாவில் முதன்முதலாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கினார்கள். வேலை வாய்ப்பாக பதிவு மூப்பு  அடிப்படையில்  ஆசிரியர்களை நியமனம் செய்தார்கள்.*


 *அதிமுக ஆட்சியில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,  என 55,000 பேரை 01.06.2006  முதல் ஒரே சமயத்தில் காலமுறை ஊதியம் வழங்கி அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி ஆணை வழங்கினார்கள்.*



 *கருணைத்தொகையினை தவிர்த்து விட்டு போனஸ் என்று அறிவித்தார்கள்.*


 *ஈட்டிய விடுப்பினை பணமாக்கிக் கொள்ளலாம்!.. என்பதற்கும் அரசாணை வழங்கினார்கள்!.. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இல்லாத பதவி என்பதால் அவர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் ₹ 5400/- சிறப்பு நிலை ஊதியம் ₹ 5700/- என்பதை நிர்ணயம் செய்து அரசாணை வழங்கினார்கள்.*


*இறந்தவர்களை காடு சேர்ப்பதற்காக செலவிற்காக முதலில்  பத்தாயிரத்தை தொடங்கியவர். அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு வழங்கிய ஊக்க ஊதிய உயர்வினை அவரது காலத்திலும் தொடர்ந்து வழங்கினார்கள்.*



*தமிழ் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறலாம் என்று அவர் காலத்தில் தான் ஆணை கொண்டுவரப்பட்டது.*


 *மந்தண முறையை நீக்கினார்கள்.*


 *வேலை நியமன தடை சட்டத்தை நீக்கியவர்.*


 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநாட்டில் தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்கள்.. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியிக் காலத்தில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட 9 அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள்.*


 *கோவிட் பெருந்தொற்று  காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு,  ஈட்டிய விடுப்பு சரண் செய்து கொள்வது நிறுத்திவைப்பு ஆகியவற்றையெல்லாம் விடுவித்தது,  வேறெங்கும் இல்லாத புதிய திட்டமான அரசுப் பணிகளில் விபத்தில் உயிரிழக்க நேர்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய், இயற்கை மரணம் அடைந்தால் பத்து லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடாக தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.*


 *பணியில் இருக்கும் போது மரணம் அடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை திருமண உதவித் தொகையாகவும், மேலும் உயர்கல்வி பயில 10 லட்சம் வரையில் நிதி உதவியும் வழங்குவதன் மூலம் நாட்டிற்கே வழிகாட்டி வருவதாகவும் தெரிவித்தார்கள்.*


 *அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாயாகவும், மேலும் உயர் கல்வி பயில 10 லட்சம் வரை நிதி உதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்கள்.*


 *அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் 10,000 ரூபாயில் இருந்துரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் அவர்களது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்கள்.*


 *2003இல் அறிமுகப்படுத்திய புதிய  ஓய்வூதிய திட்டத்தினை 22 ஆண்டுகளுக்குப் பிறகு   ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய  திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளுடன் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத்  (TAPS) திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.* 


*நிதிப்பற்றாக்குறைக்கு முதல் தவணையாக 13000 கோடி நிதியினை ஒதுக்கி உள்ளதாகவும், ஆண்டுதோறும் 13,000 கோடி நிதியினை TAPS திட்டத்திற்காக ஒதுக்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. என்று பெருமையாக தெரிவித்தார்கள்.*


 *ஆனால் 10% பங்களிப்பு தர வேண்டும் என்பது பற்றி முன்னுதாரணமாக முதலமைச்சர் எதையும் அறிவிக்கவில்லை.*


 *இந்தத் திட்டத்தை அறிவித்த உடன் இனிப்புகள் பரிமாறிக் கொண்டவர்களுக்கு வழக்கு மொழியில் இனிப்பூட்டிய  நிகழ்வினை மாநாட்டில் பொங்கி மகிழும் இதய உணர்வுடன் பரிமாறிக் கொண்டார்கள்.*


 *சில ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகிற போது கூட, மேலை நாடுகளிலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மட்டுமே அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் அமல்படுத்தியதற்கு நன்றி பெருக்கினை தெரிவிக்கக்கூடிய அடையாளமாகத்தான் இந்த மாநாட்டினை நடத்துகிறோம்!.. பாராட்டு மலர்களை தெரிவித்துள்ளார்கள்!..*


 *நாமும் வரவேற்று மகிழ்கிறோம்!..*


 *ஆனால் இந்திய திருநாட்டில் உள்ள மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக ஜோதிபாசு அவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் இப்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி அவர்கள் ஆட்சி காலத்திலும் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது... என்பதை ஏன் சொல்ல மறந்தார்கள்?.. என்று தெரியவில்லை!.*


 *ஆந்திர மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்ட சலுகைகளை பங்களிப்பு இல்லாமல் ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.*


 *5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தப்பட்டு ஆணை வழங்கி விட்டார்கள். மத்திய அரசின் ஓய்வூதிய ஆணையத்திடமிருந்து நிதியினை பெற முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.*


 *ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் ஒரு லட்சம் கோடி சிபிஎஸ் நிதியினை மத்திய ஓய்வூதிய  ஆணையத்திடம் இன்றும் செலுத்தப்படாமல், காப்பீட்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.*



 *கருத்துக்கணிப்பு..*



 *புதிய ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்திருக்கக் கூடிய 61/4 லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தினால் TAPS திட்டத்தினை எத்தனை பேர் வரவேற்கிறார்கள் என்றபதனை அரசு தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.*


 *ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு  மாநாடும் சில மாநில ஒருங்கிணைப்பாளர்களின் பாராட்டுரையும்..*


 *எதிர்க்கட்சிகள் சொல்வது போல திமுக மாநாடாகவே நடத்தினார்கள். முதலில் பேனரில் திமுக கொடியினை போட்டு வெளியிட்டு,  எதிர்ப்புகள் வந்த பிறகு அந்த பேனரை எடுத்து விட்டார்கள்.*


 *மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் பேசும்போது அடுத்த ஆட்சியும் 2026 இல் முதல் அமைச்சர் அவர்கள் தலைமையில் தான் அமையப் போகிறது...  இன்னொரு ஒருங்கிணைப்பாளர் 2036 வரையில் நீங்கள் தான் முதலமைச்சர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.*


 *இன்னொரு ஒருங்கிணைப்பாளர் ஓய்வறியா உதயசூரியனே!.. நீங்கள் தான் நிரந்தர முதலமைச்சர்!.. என்று அறிவித்தார்கள்.*


 *ஆனால் கூடியிருந்த கூட்டமோ? ஏதும் அறியாதவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள்!.*


 *இதுவரையில் ஜாக்டோ ஜியோ என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டத்தில் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதரவினை இழந்த கூட்டமாகத்தான் காணப்பட்டது.*


 *2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நடத்தியவர்கள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!..*


 *வீரம் செறிந்த இந்தியாவியே திரும்பிப் பார்க்க வைத்த உரிமை மீட்பு மாநாடு நடத்தி இருந்தால்  எழுச்சியாவது வந்து இருக்கும்.*


 *நன்றி அறிவிப்பு மாநாடு என்பது ஒரு விழாவில் தேசிய கீதம் பாடிவிட்டால் நிகழ்ச்சி நிறைவு பெற்றுவிட்டது என்பது போல... இனி கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பாக எந்த போராட்டத்தினையும் நடத்த வாய்ப்பு இல்லை!.. என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்த நிகழ்வுகளாகவே கருதுகிறார்கள்.*



 *தனிசங்கங்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தலாம். ஆனால் ஆயத்த மாநாடு... கோரிக்கை மாநாடு நடத்திய கூட்டமைப்புகளில், நன்றி அறிவிப்பு மாநாடு  நடத்தியது முதன்முறையாக இந்த மாநாடு தான். இது கடைசி மாநாடாக அமைய வேண்டும்!.*



 *ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு கட்சியின் மீது பற்றுதலும் ஆதரவு உணர்வும் உண்டு. ஆனால் அவரவருக்கு அடையாள முகவரியாக அவர்கள் இருக்கின்ற சங்கங்கள்தான் என்பதை மறந்து விட்டார்களே!. எந்த அறிவிப்பும் இல்லாமல் மாநாடு முடிந்து விட்டது.*


 *மாநாடு முடிந்து கூட்டத்தில்  இருந்து கலைந்து சென்ற உறுப்பினர்களின் கேள்விக் கணைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.*


 *10 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாவது நிறைவேறியுள்ளதா?.. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்வு கண்டு விட்டோமா?.. குழு அறிக்கை வெளிவந்துவிட்டதா?.*


 *60 ஆண்டுகளாக தொடக்கக்கல்வி ஆசிரியர்களுடைய முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் நடைமுறையில் இருந்து வந்ததை மாநில அளவில் மாற்றி அமைத்து அரசாணை 243 வெளியிட்டார்கள். பெண் ஆசிரியர்களை பாதிக்கும் அந்த அரசாணையில்  குறைந்தபட்சம் திருத்தத்தையாவது வெளியிட்டார்களா?..*


 *அந்த அரசாணை வெளிவந்ததற்கு நன்றி தெரிவித்து மாநாடு நடத்தியவர்கள் தான் இந்த ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டையும் நடத்துகிறார்கள்..*


*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்று எழுதிக் கொடுத்தவர்களுடன் தான் இந்த மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.*


 *தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலைஞர் அரசில் வழங்கப்பட்ட₹ 5400 தர ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்து கோரிக்கை வைத்தவர்கள் தான் இந்த நன்றி அறிவிப்பு மாநாட்டினை நடத்தி இருக்கிறார்கள்.*


 *என்பதை மறக்கத்தான் முடியுமா?.. மறுக்கத்தான் முடியுமா?*


*சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?..*


 *அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா?.. இல்லை!.. இல்லை!.. இல்லை!..*


*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எளிமை, இனிய அணுகுமுறை கொண்டவர்!. எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு வாய்ப்பினை அளித்து வருபவர்.. என்பதை யாராலும் மறுக்க முடியாது.*


*ஆனால் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியை நடத்துகிறார்கள். ஆனால் அனைத்து நிர்வாகத்தினையும் அதிகாரிகள் தான் நடத்தி வருகிறார்கள். எந்த அரசிலும் காண முடியாத ஒரு வித்தியாசமான அணுகுமுறை அதிகாரிகள் மட்டுமே ஆட்சி செய்கின்ற நிர்வாகத்தினை தமிழ்நாட்டில் உள்ளோர் அன்றாடம் கண்டு கேட்டு பாதிப்படைந்து வருகிறோம்!..*



*ஆதார் அட்டையைப் போல அவரவர் சங்கங்களின் அடையாள முகவரி என்பதை ஏன் மறந்து போனார்கள் என்று தெரியவில்லை?..*


 *STFI அகில இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு   தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எட்டு ஆசிரியர் இயக்கங்கள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்று இருந்தாலும் கொள்கை உணர்வோடு நன்றி அறிவிப்பு மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்!.. என்று சூளுரைத்து  பங்கேற்கவில்லை.. என்பதை கண்டு அவர்களை உச்சி முகர்ந்து பல போராட்டங்களை நடத்தியவன் என்ற முறையில் பாராட்டி மகிழ்கின்றேன்.*



 *நன்றி அறிவிப்பு மாநாட்டில் நன்றியுரை தமிழக ஆசிரியர் கூட்டணிக்கு அளித்திருந்தாலும்  கொள்கை வைரங்களாக இயக்கத்தினை பேணிப் பாதுகாத்து வருகிற மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட/ வட்டாரப் பொறுப்பாளர்கள் எவரும்  எந்த அறிவிப்பும் இல்லாமல் நன்றி அறிவிப்பு மாநாட்டில்   கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். என்பதற்காகவே கலந்து கொள்ளவில்லை என்பதை நெஞ்சம் நெகிழ.. கொள்கை கண்ணீர்.. கண்களில் விழுந்திட உணர்ச்சிப் பெருக்குடன்  அர்ப்பணித்துக் கொள்கிறோம்!..*


 *இனிப்பூட்டிய நிலைமை நின்று நிலைப்பதில்லை!.. அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதால் விரத்தியும் ஏமாற்றமும் அடைந்து.... அழைத்து வந்தவர்கள் மீதும், அரசின் மீதும் கோபக்கனலை கக்கிக் கொண்டே தான் வெளியேறினார்கள்.. என்பதை உணர முடிகிறது. வாக்கு வங்கியினை அதிகரிக்கும் மாநாடாக அமையவில்லை!.. சேதாரப்படுத்தும் மாநாடாக அமைந்திருக்கிறது... என்பதை வேதனை உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!.*


 *உங்களின் கரம்பற்றி இதயம் தொட்டு பெரிதும் வேண்டுகிற உங்களின் சகோதர உறவு.... தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு இருப்பேன்... நன்றி!.. வணக்கம்!..  *


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com ,தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு - ஆதரவா? அதிருப்தியா?

   முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஆதரவினை கொண்டு வந்து சேர்த்ததா? அதிருப்தியினை கொண்டு...