கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கிடையேயான இடைவெளி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

 கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை -

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,

பொது நல மருத்துவர், 

சிவகங்கை.



ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசியின் இந்திய வடிவமே  கோவிஷீல்டு  என்பதை அனைவரும் அறிவோம்.


ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூட்டாக இந்த தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை 

 பிரேசில்,

அமெரிக்கா,

பிரிட்டன் போன்ற நாடுகளில் நடத்தி வருகின்றன.


ஆய்வின் இடைக்கால முடிவுகளை அவ்வப்போது நவீன மருத்துவ உலகின் பெயர்பெற்ற "லான்சட்" மருத்துவ இதழில்  அப்டேட் செய்கிறார்கள். 


இந்த மூன்றாம் கட்ட ஆய்வின் லேட்டஸ்ட் அப்டேட் 6.3.2021 அன்று வெளியிடப்பட்டது. 


 அந்த ஆய்வு முடிவில் முதல் டோஸ் கோவிஷீல்டுக்கும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டுக்கும் இடையே 12 வாரங்கள் இடைவெளி விடும் பொழுது  தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 81.3% என்றும், 


அதே இடைவெளியை 6 வாரங்களுக்குள் சுருக்கினால் தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 55.1%  என்ற அளவில் குறைகிறது என்றும் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


இந்த ஆய்வு முடிவுதனை பறைசாற்றுமாறு பிரிட்டன் அரசாங்கமும் கனடா அரசாங்கமும் அவர்களது நாட்டில் இரு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை 90 நாட்கள் என்று நிர்ணயம் செய்துள்ளனர். 


இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகள் குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கும் குழு, இது குறித்து பிப்ரவரி மாத மத்தியில் கலந்தாலோசனை செய்தது.


ஆலோசனையின் முடிவில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி பழைய முறைப்படியே 28 நாட்கள் இடைவெளியில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


அதிகபட்சம் கூடுதலாக இரண்டு வாரங்கள் , அதாவது 42நாட்களுக்குள்  தடுப்பூசி பெற வலியுறுத்துகிறது. 


தடுப்பூசியை கண்டறிந்து ஆய்வு நடத்தி  வரும் நிறுவனம் 12 வாரம் வரை இரண்டாவது டோஸ் ஊசியை தள்ளி வைத்தால் நோய் தடுக்கும் திறன் 81.3% என்று கூறியுள்ள போதிலும்,

இந்த இடைவெளியை ஆறு வாரங்களுக்குள் சுருக்கினால் நோய் தடுக்கும் திறன் 55.1%ஆக குறைகிறது என்று தற்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் போதிலும், 


இந்தியாவின் கோவிட் தடுப்பூசி பரிந்துரைக் குழு தொடர்ந்து 28 நாட்கள் இடைவெளியை பரிந்துரை செய்து வருகின்றது. 


இதற்கான காரணமாக குழு கூறுவது யாதெனில் "இந்தியாவில் தடுப்பூசிக்கு எந்த பஞ்சமுமோ தட்டுப்பாடோ வராது. இங்கு தான் பெரும்பான்மை தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே 28 நாட்களுக்குள் தடுப்பூசி போடுவது சிறந்தது." 


மேலும் கூறுவதாவது 

"ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்டால் குறைவான எதிர்ப்பு சக்தியே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் இரண்டாவது ஊசியை உடனே அதாவது நான்கு வாரத்துக்குள் செலுத்திக்கொள்வது தான் சரி" என்கிறது. ( அறிவியல் ஆய்வோ ஒரு டோஸ் போட்டு 22வது நாளில் இருந்து 90 வது நாள் வரை சிறந்த எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்று கூறுகிறது) 


இருப்பினும், 

உலக சுகாதார நிறுவனம் கோவிஷீல்டு குறித்த இடைக்கால வழிமுறைகளை 10.2.2021 அன்று வழங்கியது. 


அதில் கோவிஷீல்டின்  இரு டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 8 முதல் 12  வாரங்களுக்குத் தள்ளிப்போடுவது நல்ல வழிமுறை என்று கூறியுள்ளது. 


உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து வழிமுறைகளைக் கூறும் வல்லுனர் குழுவில் இந்திய வல்லுனர்கள் பலர் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்ற முன்கள மருத்துவ ஊழியர்களில் பெரும்பான்மையினர்  தங்களது இரண்டாவது டோஸ் ஊசியை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி தள்ளிப்போட்டு வருகின்றனர் என்று செய்திகளும் கள நிலவரமும் கூறுகின்றது. 


பொதுமக்களாகிய  அனைவரும் இந்திய கோவிட் தடுப்பூசி நெறிமுறைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இரண்டாவது டோஸ் 28 நாட்களில் போடுவது சிறந்தது என்று கருதினால் அப்போது போட்டுக்கொள்ளுங்கள். 


நிகழ்கால அறிவியலின்படி, 42 நாட்களுக்குள் இடைவெளியை சுருக்கினால் Efficacy 55.1% என்றும் 


இடைவெளியை 84 நாட்கள் வரை நீட்டினால், 81.3% efficacy என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


இத்தகையதோர் ஆய்வு முடிவு வெளிவந்திருக்கிறது எனத் தெரிவிப்பது மட்டுமே எனது பணி. 


எனக்கான இரண்டாவது தடுப்பூசியை இந்த ஆய்வு வருவதற்கு முன்னமே எடுத்து விட்டேன். ஆயினும் இரண்டாவது டோஸ் இனிமேல் எடுக்க இருக்கும் மக்களுக்கு இந்த ஆய்வு குறித்தும்,


இந்திய அரசின் தடுப்பூசி வழிமுறை குழுவின் வழிகாட்டுதல்களையும் கூறிய திருப்தியில்  இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். 


இரண்டாவது டோஸ் தள்ளிப்போடுவது குறித்த வழக்கில்,

கற்றறிந்த சான்றோர் இடம்பெற்றுள்ள இந்திய கோவிட் தடுப்பூசி வழிமுறைக் குழுவின் தீர்ப்பே இங்கு  இறுதியானது.


அவர்கள் 28 நாட்கள் என்று தொடர்ந்து கூறிவருவதால் (அறிவியல் ஆய்வு முடிவுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் இக்குழுவினரின் இந்த தீர்ப்புக்கு நேரெதிராக இருந்தாலும்)

மக்கள் அனைவரும் அதை கடைபிடித்தாக வேண்டியதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.  


ஆயினும் பல மருத்துவ முன் கள ஊழியர்கள் நிகழ்கால அறிவியலை மதித்து தங்களுக்கான இரண்டாவது டோஸை தள்ளிப்போட்டுவருகிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.


சிந்தியுங்கள் 

சிந்திப்போரே சிறந்தவர்கள்


நன்றி...


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


ஆதாரங்கள் 

1. Phase III இடைக்கால முடிவு லான்சட் 

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)00528-6/fulltext


2. https://apnews.com/article/uk-study-2nd-virus-vaccine-shot-delay-53c40e579c3209a77ffc6ca798aff1a7


3. https://beta.ctvnews.ca/local/london/2021/3/9/1_5340124.html


4. https://beta.ctvnews.ca/national/coronavirus/2021/3/3/1_5331577.html


5. https://www.tribuneindia.com/news/chandigarh/beneficiaries-delaying-second-dose-on-purpose-says-expert-216160

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...