மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் "கிளாண்டர்ஸ்" நோய்த் தொற்றால் சென்னையில் குதிரை உயிரிழப்பு
சென்னை சேப்பாக்கத்தில் பொதுமக்கள் சவாரிக்கு பயன்படும் குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்றால் உயிரிழப்பு
மனிதர்களுக்கு பரவும் ஆபத்தான கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழந்த நிலையில், சென்னையில் 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் பரிசோதனை
சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்று நோயால் குதிரை ஒன்று உயிரிழந்ததையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குதிரைகள், கழுதைகளிடையே பாக்டீரியாவால் ஏற்படும் 'கிளாண்டர்ஸ்' நோயானது மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் நேரடித் தொடர்பு அல்லது அந்த குதிரைகளின் தொடர்புடைய பொருள்களில் இருந்து மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவலாம். எளிதில் பரவக் கூடியது, மரணத்தை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும்.
இந்நிலையில் சென்னையில் மக்கள் சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்தவும் மேலும் இதுபற்றி தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குதிரைகள் பராமரிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடாமல் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடைத்துறை அலுவலர்கள் கூறியதாவது: 'கிளாண்டர்ஸ்' என்பது, பாக்டீரியாவால் ஏற்படும் கொடிய தொற்றாகும்; இது குதிரை, கழுதை போன்ற விலங்குகளைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல், அவற்றோடு நெருங்கி பழகும் மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஒரு ஆபத்தான நோய். இந்த நோய்க்கு, இதுவரை முழுமையான தடுப்பூசியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ கிடையாது. பாதிக்கப்பட்ட குதிரையின் சளி, கண்ணீர் மற்றும் உடலில் உள்ள புண்களிலிருந்து வடியும் திரவங்கள் மூலமும், அவை பயன்படுத்திய தண்ணீர் வாளி, தீவனத் தொட்டிகள் மூலமும், இந்த தொற்று பரவக்கூடியது.
கால்நடை பராமரிப்புத் துறை, சென்னை மாநகராட்சி இணைந்து, குதிரைகள் வளர்க்கப்படும் பகுதிகளில், கிருமி நாசினிகளைத் தெளித்து, துாய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது பிற மாவட்டங்களில் இருந்தோ குதிரைகளைக் கொண்டு வருவதற்கும், எல்லைகளில் அவற்றின் நடமாட்டத்திற்கும், தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
குதிரை வளர்ப்போர் மற்றும் பராமரிப்பாளர்கள், தங்கள் விலங்குகளிடம் சளி, இருமல் அல்லது தோலில் புண்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.














.jpeg)


