மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு சேர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோளினை வெளிப்படுத்துகின்றோம்
*AIFETO... 18.08.2026.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசு 100 நாள்களை நிறைவு செய்து இருக்கிறது!. வரவேற்க வேண்டிய அம்சங்களை வரவேற்க வேண்டியவர்கள் வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள்!. 60 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளும் எதிர்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையின் நிகழ்வுகளில் நீண்டகால அனுபவ கொள்முதலினைப் பெற்றவர்கள் அவர்கள்.. 100 நாள் சாதனைகளை தவிர்த்துக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்கத்தான் செய்வார்கள். இது இயல்பான ஒன்றுதான்.*
*ஆனால் எல்லோரும் ஒன்றை கருத்தொருமித்து வரவேற்றுப் பாராட்டுகிறார்கள்!.. சட்டப்பேரவையின் நிகழ்வுகளை நேரலையாக அன்றாடம் ஒளிபரப்புவது என்பது 60 ஆண்டுகால தமிழ்நாட்டு வரலாற்றில் நடைபெறாத நிகழ்வு என்பதை எவரும் மறுக்க முடியாது.*
*நேரலையாக ஒளிபரப்பும் போது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்ப்பதற்கான வாய்ப்பு அமையும். என்னதான் ஆளுங்கட்சியின் சாதனைகள் இருந்தாலும் விமர்சனங்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்க முடியாது. ஆனால் முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு நேரலையாகவே சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.*
*மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களை அனைத்து கட்சிகளும் பாராட்டத்தான் செய்கிறார்கள். காரணம் அனைவருக்கும் வாய்ப்புகளை சமமாக அளித்து வருகிறார். அமைச்சர்களின் உண்மைக்கு மாறான பேச்சினையும், தகவலினையும் அவை குறிப்பிலிருந்து நீக்கி அறிவிக்கிறார்.*
*எங்களைப் போன்ற மூத்த இயக்க தலைவர்களின் அனுபவங்களை கனிவான பார்வைக்காக கொண்டு வருகிறோம்!...*
*வலம் வரும் வதந்திகள் பல நேரங்களில் உண்மைக்கு புறம்பாக அமைந்து விடுகின்றன. சில நேரங்களில் வதந்திகள் உண்மையாக நிலைத்து நிற்பதும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரையில் பன்முகத்தன்மை கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ஆ.ராஜ்மோகன் அவர்களை கல்வித்துறைக்கு அளித்துள்ளார்கள். வரவேற்று நன்றி பாராட்டுகிறோம்!..*
*பள்ளிக்கல்வி இயக்குனர் பதவிக்கு மீண்டும் முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலரை பள்ளிக் கல்வி ஆணையராக நியமனம் செய்தார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உச்சம் தொட்ட போராட்டங்களின் காரணமாக பள்ளிக்கல்வி ஆணையர் பதவி ரத்து செய்யப்பட்டது. இது முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.*
*ஆனால் எப்படி வதந்தி பரவுகிறது என்று தெரியவில்லை!. மீண்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்ய இருப்பதாக பரவலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முந்தைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற ஆய்வு மனப்பான்மை கொண்டவர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இயக்குனர் வரிசையில் தான் அந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். என்ற நடைமுறையே தவெக அரசிலும் தொடர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும்.*
*இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்களைப் பொறுத்தவரையில் நிர்வாக பொறுப்புகளை தொடர்ந்து நடத்தி வருபவர்கள்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு பொதுமக்களுக்கு நன்மைகள் செய்வது மட்டுமின்றி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள அரசு என்பதையும் நாங்கள் நன்கறிவோம்!..*
*மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் 2.30 மணி நேரம் நிதிநிலை அறிக்கையினை தண்ணீர் கூட அருந்தாமல் படித்தார்கள். அதில் பள்ளிக்கல்வித்துறைக்கும் உயர்கல்வித்துறைக்கும் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையினை விட குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளதை அறிந்து கொண்டோம்.*
*சென்ற ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் செலவு செய்யப்படாத நிதியினை இந்த பட்ஜெட்டில் குறைத்துள்ளோம்.. என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சமாதானம் சொல்லி இருக்கிறார். அதேபோல ஓய்வூதிய திட்டத்தில் ஒதுக்கப்படுகிற நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. TAPS திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுவாக 3000 கோடி நிதி உள்ளிட்ட இரண்டையும் சேர்த்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீட்டினை குறைத்து இருக்கிறார்கள்.*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசு ஒரு காலமும் இந்தப் பாதிப்பினை செய்யாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பார்கள்!..*
*முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியினைப் பார்த்து கொண்டார்கள். ஆனால் நிர்வாகம் முழுவதையும் இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். அவர்கள் ஐந்து ஆண்டு காலமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதையும் செய்ய விடவில்லை. செய்யலாம் என்று நினைத்த முதலமைச்சரையும் தடுத்தார்கள். இந்த அதிகாரிகளால் தான் பொதுத் தேர்தலில் 50 தொகுதிகள் இழப்பார்கள் என்று மூன்று ஆண்டுகாலமாக செய்தியாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பேட்டிகள் அளித்து வந்தோம். அதுதான் நடந்துள்ளது.*
*தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசிலும் நிதிநிலை அறிக்கையில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தில் இந்த நிதியினை அதிகாரிகள் குறைத்துள்ளார்கள் என்ற விமர்சனம் ஏற்பட்டுள்ளது.*
*அதுமட்டுமல்லாமல் முந்தைய அரசு போல் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசின் மீதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வெறுப்பினை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. நிதிநிலை அறிக்கையினை படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலை சரி செய்யப்படும் என்று மாண்புமிகு நிதிஅமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவிக்கின்றார். ஆனால் நிதித் துறையிடமிருந்து தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராக இன்னும் 50 ஆண்டுகளாகும் என்று அவர்கள் செய்தியினை வெளியிடுகிறார்கள்.*
*இன்று 18.08.2026 சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட TAPS திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் 50% பென்சன் கண்டிப்பாக வழங்கப்படும். பணிக்கொடை வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உறுதியினை தெரிவித்து இருக்கிறார்கள்.. வரவேற்று பாராட்டுகிறோம்!..*
*இருந்தாலும்...*
*தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை பரிசீலித்து, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உணர்வு எங்களுக்கு இப்போதும் இருக்கிறது. என்ற நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்துகிறோம்.*
*1999இல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 12,000 பேருக்கு 2026 ஜனவரி முதல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். PAY MATRIX 45 செல்லில் இருந்து 50 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு உயர்த்தினால் மட்டுமே இனி அவர்கள் ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வு பெற முடியும். இந்தக் கோரிக்கையினை அக்கறையுடன் அரசு உடனடியாக செய்ய வேண்டிய கோரிக்கையாகும்.*
*ஆசிரியர் சங்கங்களின் சார்பில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை விண்ணப்பத்தினை கொடுத்து விளக்கம் அளித்தும் இதுவரை எட்டு மாதங்கள் ஆகியும் PAY MATRIX செல் அதிகரித்து வழங்கப்படாததால் ஆண்டு ஊதிய உயர்வே இல்லாமல் 12000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் பெரிதும் பாதிப்படைத்துள்ளார்கள்.*
*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும், புலனப் பதிவு மூலமாக அனுப்பி உள்ளோம்!.*
*எந்த காரணத்தை முன்னிட்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்திற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தான் தொடர வேண்டுமே தவிர!.. இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்யும் நடைமுறையினை அறவே தவிர்த்து நீண்ட காலமாய் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து வரும் நடைமுறையினை பாதுகாத்திட வேண்டுமாய் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உணர்வுகளின் அடிப்படையில் இதனை தெரிவித்துக் கொள்கிறோம்!.*
*ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் அவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அவர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் செயலாளர் என அனைவருமே இந்திய ஆட்சிப் பணித்துறை சார்ந்த அலுவலர்கள்தான்..*
*இவர்கள் அனைவரையும் கண்காணிக்கின்ற பொறுப்பு பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களிடம் உள்ளது.*
*பள்ளிக்கல்வித்துறை ஆணையரை நியமனம் செய்வது வதந்தியாகவே இருக்கட்டும்!.. ஒருபோதும் உண்மையாக இருக்க வேண்டாம்!. என்று இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற முறையிலும் 54 ஆண்டு காலம் பொதுவாழ்வில் அனுபவக் கொள்முதல் பெற்றவன் என்ற முறையில் தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்!.*
*முற்றிலும் ஊழலற்ற ஆட்சியை எந்நாளும் தொடர்ந்து நடத்திக் காட்டுவோம்!. என்ற மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் சூளுரையினை வரவேற்று பெருமிதம் கொள்கிறோம்!*
*24.08.2026 அன்று நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் அறிவிப்புகள் வெளிவரும் என்ற நம்பிக்கை உணர்வுடன்....*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி சென்னை- 600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com .*