𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்
மாற்றங்கள் மலர்ந்தே தீரும்
* அது ஒரு தனியார் சர்வதேசப் பள்ளி, அங்கே 100க்கு 2 மதிப்பெண் குறைந்து போனதற்காக 10 வயது மாணவன் ஒருவன் மனமுடைந்து அழுகிறான்.அவனைச் சமாதானப்படுத்தப் பார்க்கிறார் ஆசிரியர். இயலவில்லை. தலைமை ஆசிரியர் வந்து பேசுகிறார். அப்படியும் பையனை சமாதானப்படுத்த முடியவில்லை. அதைப் பார்த்து தலைமையாசிரியர் வருந்தமடைகிறார். அம்மாணவனின் பெற்றோரிடம் பேசிப் பார்க்கிறார். ஆனால் பயனில்லை.
* பள்ளி நிர்வாகமும் பெற்றோரை மகிழ்விக்கவே பார்க்கிறது.
* இன்றைக்குப் பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகள் அனைத்தையும் கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதிலும் தங்கள் பிள்ளை மட்டுமே சிறந்தரவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், குழந்தைகளைத் தங்கள் விருப்பப்படி ஆட்டுவிக்கிறார்கள். தங்கக் கூண்டில் வளர்க்கப்படும் சர்க்கஸ் விலங்கைப் போல பிள்ளைகள் வளர்கிறார்கள். இதனால் அத்தகைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளும், பெற்றோரின் ஆசை மரங்களை உலுக்கிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொள்கிறார்கள்.
* குழந்தைகள் மீதான அழுத்தங்களை எவ்வளவு காலம் தான் பொறுப்பது? தலைமையாசிரியர் லூ வாய் ஹங் வருத்தம் அடைகிறார். தனது வேலையை ராஜினாமா செய்கிறார்.லூ வீட்டிலிருக்கும் போது ஒரு செய்தியைப் பார்க்கிறார். ஒரு கிராமத்தில் இருக்கும் மழலையர் பள்ளியைப் பற்றிய செய்தி அது.
* யுவென் லாங் என்ற கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி, ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பழமையானது. மூன்று வகுப்புகளையும் சேர்த்து ஐந்து குழந்தைகளே படிக்கிறார்கள். இந்தக் கல்வியாண்டில் ஒரு குழந்தை தேர்ச்சி பெற்று வேறு பள்ளிக்குப் போய்விடும். விதிமுறைகளின்படி ஐந்து பேருக்குக் குறைவாக இருந்தால் பள்ளியை மூட வேண்டும். கிராம சபையால் 4500 ஹாங்காங் டாலர் மட்டுமே மாதச் சம்பளம் தர முடியும். ஆகவே அங்கு ஆசிரியரும் இல்லை. அந்தப் பள்ளியை இப்போதே மூடிவிட்டால் என்ன?
* செய்தியைப் பார்த்ததும் லூ வருத்தமடைகிறார். மறுநாள் அந்தக் கிராமத்திற்குச் செல்கிறார். பள்ளியைப் பற்றிய செய்தி சமூக ஊடகங்களிலும் பரவியதால் பள்ளியை மூடிவிடுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள்.லூ அவர்களோடு பேசுகிறார். கிராமத் தலைவரைப் பார்க்கிறார்."மிக மிகக் குறைவான சம்பளம் என்றாலும் ஆசிரியராகப் பணியாற்ற விருப்பமாக இருக்கிறேன்" என்று சொல்கிறார்.
* ஆசிரியர் கிடைத்துவிட்டதால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி."ஐந்து குழந்தைகளுக்கு மூன்று வகுப்புப் பாடங்களை எப்படி நடத்த முடியும்? எப்படியும் பள்ளியை மூடிவிடலாம்" என்று ஊரார் சிலர் பேசுகிறார்கள்.
* குழந்தைகளுக்கு முழுமையான ஈடுபாட்டோடு லூ கற்பிக்கிறார். வயதிற்கேற்ற செயல்பாடுகள் வாயிலாகக் குழந்தைகள் கற்கிறார்கள். கற்றல் கொண்டாட்டமாக ஆகின்றது.
* லூ குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் பெற்றோர்களிடம் பேசுகிறார். இருக்கும் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதில் கவனம் செலுத்துகிறார். பெற்றோரின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறார். பெற்றோருக்கும் பள்ளிக்கும் உள்ள பிணைப்பு வலுவாகிறது.
* ஆசிரியர், பெற்றோரின் முயற்சியால் புதிய கல்வியாண்டில் இரண்டு குழந்தைகள் பள்ளியில் சேருகிறார்கள். ஆறு குழந்தைகள் படிப்பதால் பள்ளி காப்பாற்றப்படுகிறது.
* ஹாங்காங்கைச் சார்ந்த கிராமப் பள்ளியைப் பற்றிய உண்மைக் கதையே '𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫' என்ற திரைப்படமாக 2015ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து இப்பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்போது 60 குழந்தைகள் படிக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியோடு படம் நிறைவடைகிறது.
* குழந்தை நேயமான ஆசிரியர்களும் சமூகமும் இணையும்போது மாற்றங்கள் மலர்ந்தே தீரும்.
* 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫' திரைப்படத்தை https://youtu.be/3w2Pgtn_OIM?si=aZO0dPM96yihakcy யூடியுப் தளத்தில் காணலாம்.
தமிழ் கதை விளக்கம்
https://youtu.be/uq5drEsjKtA?si=C7a3xtdj1TeDk3Kj
* 𝐓𝐡𝐢𝐬 𝐀𝐫𝐭𝐢𝐜𝐥𝐞 𝐢𝐬 𝐨𝐛𝐭𝐚𝐢𝐧𝐞𝐝 𝐟𝐫𝐨𝐦 *கனவு ஆசிரியர்* ஆசிரியர்களுக்கான மாத இதழ்.
* தமிழ்நாடு அரசு, *பள்ளிக் கல்வித் துறை*











