மைசூர் அரச குடும்பத்திற்கு ரூபாய் 3400 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலம், பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை அகலப்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது.
இப்பணிகளுக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தை சேர்ந்த 15.39 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு 2023ல் கையகப்படுத்தியது.
இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அரசு மவுனம் சாதித்தது.
இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில், அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம், 3,400 கோடி ரூபாய் டி.டி.ஆர்., எனும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை தொகையாக அளிக்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த தொகையை உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டது. இதன்படி, கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற பதிவாளர் பெயரில் 3,400 கோடியை டிபாசிட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3,400 கோடி ரூபாயை உடனடியாக, அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.